இந்திய தமிழ் சினிமாவில் நடிப்பால் தன்னை நிரூபித்துக்காட்டி புகழின் உச்சிக்கு சென்றவர் நடிகர் விக்ரம் ஆவார். இவர் தெரிவுசெய்து நடிக்கும் ஒவ்வொரு படத்தின் கதையும் வித்தியாசமாக இருப்பதுடன், அவரின் நடிப்பாற்றலையும் நன்கு வெளிக்காட்டுகிறது.
ஒரு கதை தெரிவு செய்தால் அதன் கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை அறிந்து அக்கதாபாத்திரமாகவே மாறுகிறார் நடிகர் விக்ரம்.
இனி, நடிகர் விக்ரம் வாழ்க்கை வரலாறு (Vikram Biography in Tamil) பற்றி பார்ப்போம்.
பிறப்பு மற்றும் குடும்பம்
நடிகர் விக்ரம் 1966 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி சென்னையில் கிரிஸ்டியன் தந்தைக்கும் இந்து தாயாருக்கும் மகனாக பிறந்தார்.
இவர் ஆரம்பத்தில் கென்னடி என அழைக்கப்பட்டார். இவரின் தந்தையின் பெயர் ஜோன் விக்டர் ஆகும்.
விக்ரமின் தந்தையும் ஒரு நடிகராவார். அவர் தமிழ் சினிமாவில் வினோத் ராஜ் என்று அழைக்கப்பட்டதுடன் நடிகர் விஜய் அவர்களின் கில்லி, திருப்பாச்சி உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ராஜேஸ்வரி எனும் விக்ரமின் தாயார் ஒரு துணை மாவட்ட ஆட்சியாளர் ஆவார்.
நடிகர் பிரசாந்தின் தந்தையான நடிகர் தியாகராஜன், ராஜேஸ்வரி அவர்களின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
விக்ரம் அவர்களுக்கு அர்விந்த் என ஒரு தம்பியும் அனிதா என ஒரு தங்கையும் உண்டு.
ஆரம்ப வாழ்க்கை
விக்ரமிற்கு தனது இயற்பெயரான கென்னடி எனும் பெயர் அவருக்கு பிடிக்கவில்லை.
ஆகவே, தந்தையின் பெயரின் முதலெழுத்துக்களான “Vi” யும், தனது பெயரின் முதலெழுத்தான “K” யும், தாயாரின் பெயரின் முதலெழுத்துக்களான “Ra” யும், தனது ராசியான மேஷ ராசியின் ஆங்கில வடிவமான “Ram” யும் இணைத்து “விக்ரம்” எனும் பெயர் உருவாக்கப்பட்டுள்ளது. மேஷ ராசி ஆங்கிலத்தில் “Ram” என அழைப்படுவது குறிப்பிடத்தக்கது.
விக்ரம் அவர்கள் ஏற்காட்டிலுள்ள மான்ட்ஃபோர்ட் (Montfort) பள்ளியில் கல்வியை கற்றார். அதன்போது கராத்தே, குதிரை சவாரி, நீச்சல் விளையாட்டு போன்ற செயற்பாடுகளில் பங்குபற்றி திறமைகளை வளர்த்துக்கொண்டார்.
தனது பாடசாலைக் கல்வியின் பின் நடிப்பில் அதிக ஆர்வம் காட்டினார். இருந்தபொழுதிலும், தனது தந்தையின் கட்டாயத்தால் சென்னை லொயோலா கல்லூரியில் (Loyola College, Chennai) ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றார்.
அதனை தொடர்ந்து, வணிக நிர்வாகத்தில் முதுநிலை (MBA) கல்வியை தொடர்ந்தார். அதன்போது, சில மேடை நாடகங்களில் தோன்றிய நடிகர் விக்ரம் சிறந்த நடிகருக்கான விருதினை சென்னையின் இந்திய தொழினுட்ப நிலையத்தில் (Indian Institute of Technology Madras (IIT Madras)) நடைபெற்ற விழாவில் பெற்றார்.
விருதை பெற்ற பின்னர் அவர் தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிலில் சென்றுகொண்டிருந்த போது, ஒரு பார வண்டியில் (Truck in Tamil) மோதி விபத்துக்குள்ளானார்.
அதனால், அவரது வலது கால் பலத்த காயங்களுக்கு உட்பட்டது. அவர் மூன்று வருடங்களாக படுத்தப்படுக்கையாக சிகிச்சை பெற்றார். அதன்போது, காயமடைந்த காலை வெட்டியகற்றாமல் இருப்பதற்காக 23 அறுவைசிகிச்சைகளை செய்தார்.
முற்றாக குணமடைய முன்னதாக, ஒரு வருட காலமாக இவர் ஊன்றுகோல் பயன்படுத்தியுள்ளார்.
அதற்கு பிறகு, தனது பட்டப்படிப்பிற்கான இறுதியாண்டு கல்வியை தொடர்ந்தார். அதற்காக வீட்டிலிருந்தே விளக்கக்கட்டுரையை (Dissertation) முடிப்பதற்கு அனுமதியும் பெற்றார்.
நடிப்பு வாழ்க்கையின் ஆரம்பம்
நடிகர் விக்ரம் சோலா டீ (Chola Tea), டீவீஎஸ் எக்செல் (TVS Excel) மற்றும் அல்வின் கடிகாரங்கள் (Allwyn Watches) போன்ற தயாரிப்புகளின் விளம்பரங்களின் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையை ஆரம்பித்தார்.
அத்துடன், 1988 ஆம் ஆண்டின் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கிடையில் ஒளிபரப்பான “கலாட்டா குடும்பம்” எனும் தொடலைக்காட்சி தொடரின் ஆறு பாகங்களிலும் நடித்தார்.
1990 ஆம் ஆண்டு இயக்குனர் T. J. ஜோய் அவர்களின் இயக்கத்தில் வெளியான “என் காதல் கண்மணி” எனும் திரைப்படத்தில் நடிகர் விக்ரம் அறிமிகமானார்.
இவர் ஆரம்பத்தில் பல படங்களில் நடித்திருந்தாலும், அவரால் ஒரு நடிகராக தனது நடிப்பை மக்கள் மனதில் நிலைநிறுத்த முடியாமல் போனது.
அத்துடன், அவர் மம்முட்டி, சுரேஷ் கோபி, ஜெயராம் போன்ற பல முன்னணி நடிகர்களுடனும் நடித்தார்.
1997 ஆம் ஆண்டு நடிகர் அமிதாப் பச்சன் அவர்களின் முதல் தமிழ் பட தயாரிப்பான “உல்லாசம்” திரைப்படத்தில் நடித்தார்.
இப்படத்தின் மூலம் இவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் உருவானது. இப்படத்தில் நடிகர் அஜித்குமார் அவர்களும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த படங்கள்
1997 ஆம் ஆண்டு இயக்குனர் பாலா அவர்கள் இயக்கிய அவரின் முதல் திரைப்படமான “சேது” எனும் படத்தில் நடிகர் விக்ரம் நடித்தார்.
இப்படத்தின் கதாபாத்திரத்திற்காக விக்ரம் தனது தலையை மொட்டை அடித்தார்; 21 கிலோகிராம் எடை குறைந்தார்; நகங்களை நீளமாக வளர்த்தார்.
இப்படத்தில் அவர் “சீயான்” என்று அழைக்கப்பட்டார். அன்றிலிருந்து இன்று வரை ரசிகர்களால் அப்பெயர் கொண்டு அழைக்கப்படுகிறார்.
“சேது” திரைப்படம் வெளியாகி சென்னையில் 100 நாட்களை கடந்து பல தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடியது. விக்ரமின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு அவருக்கு நடிகர் என்ற அங்கீகாரம் மக்கள் மத்தியில் கிடைத்தது.
2001 ஆம் ஆண்டு தரணியின் இயக்கத்தில் வெளியான “தில்” எனும் திரைப்படத்தில் நடித்தார் விக்ரம். இப்படத்தின் கட்டான உடலமைப்பை கொண்ட கதாபாத்திரத்திற்காக கடுமையான உணவுமுறையை பின்பற்றினார்.
அதற்காக பழங்களையும் பழச்சாறையும் மாத்திரமே உணவாக உட்கொண்டார். இப்படமும் நேர்மறையான விமர்சனங்களை பெற்று விக்ரமிற்கு பாராட்டுக்களை அள்ளிக்கொடுத்தது.
நடிகர் விக்ரமின் நடிப்பு வாழ்க்கையின் மிக முக்கியமான ஒரு படமாக “காசி” திரைப்படத்தை கூறலாம். இந்த படத்தில் கண் தெரியாத பாடகராக நடித்திருப்பார்.
வெயிலில் கருத்த தோற்றத்தை பெறுவதற்காக, சென்னையில் கடலுக்கு அருகில் உள்ள தனது வீட்டின் மொட்டைமாடியில் வெயிலில் காய்ந்து அக்கதாபாத்திரத்திற்காக தயாராகியுள்ளார்.
மேலும், பார்வையற்றவரான தோற்றத்திற்கான பயிற்சியின் போது அவருக்கு மயக்கத்துடன் தலைவலியும் வந்துள்ளன.
இப்படத்தினால் பாராட்டுகளையும் பெற்று தனது அப்பாவியான நடிப்பால் பலரின் கண்களில் கண்ணீரை வரவைத்தது மட்டுமன்றி, மக்களின் மனதையும் கவர்ந்தார்.
அதற்கு பிறகு” வெளியான “ஜெமினி, சாமுராய், கிங், தூள், சாமி” போன்றவை இவரின் நடிப்பில் வந்த வெற்றிப்படங்களாகும்
2003 ஆம் ஆண்டு மீண்டும் இயக்குனர் பாலாவுடன் “பிதாமகன்” எனும் திரைப்படத்தில் கைக்கோர்த்தார் நடிகர் விக்ரம்.
அப்படத்தில் விக்ரமுடன் இணைந்து நடிகர் சூர்யா உட்பட பல முன்னணி நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.
குறிப்பிட்ட சில வசனங்களை மாத்திரம் பேசி முக பாவணையில் தனது உணர்வுகளை வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் விக்ரம். இத்திரைப்படம் விக்ரமின் பட வரிசையில் ஒரு மைல்கல்லாக அமைந்தது.
நடிகர் விக்ரம் இப்படத்தினால் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்ததோடு, பல விருதுகளையும் பெற்றார்.
2005 ஆம் ஆண்டு வெளியான “அந்நியன்” திரைப்படம் விக்ரமின் நடிப்பில் வெளிவந்த இன்னுமொரு சிறப்பான படமாகும்.
இப்படத்தில் இவர் வெளிப்படுத்திய மூன்று வித்தியாசமான நடிப்பாற்றலின் மூலமாக ஒரே நேரத்தில் பல கதாபாத்திரங்களை நடிக்கக்கூடிய ஒரு சிறந்த நடிகர் என விக்ரம் அவர்கள் நிரூபித்து காட்டினார்.
இதனை தொடர்ந்து வந்த விக்ரமின் படங்களில் “ராவணன், தெய்வ திருமகள், ஐ, இரு முகன், ஸ்கெட்ச், மகான், பொன்னியின் செல்வன் I, பொன்னியின் செல்வன் II போன்ற படங்களை சிறந்த படங்களாக கூறலாம்.
இவற்றில் ராவணன் ஐ. பொன்னியின் செல்வன் I, பொன்னியின் செல்வன் II ஆகிய திரைப்படங்களுக்கு இசைப்புயல் A. R. ரகுமான் அவர்கள் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
ஏனைய பணிகள்
நடிகர் விக்ரம் ஒரு சிறந்த நடிகர் மட்டுமன்றி ஒரு சிறந்த பாடகரும் ஆவார். ஆம்! ஸ்ரீ, ஜெமினி, கந்தசாமி, மதராசப்பட்டினம், தெய்வ திருமகள், சாமி 2, கடாரம் கொண்டான் உள்ளிட்ட பல திரைப்படங்களில் பாடல்களை பாடியுள்ளார்.
அத்துடன் அஜித்குமார், வினீத், வெங்கடேஷ், பிரபுதேவா உட்பட பல நடிகர்களுக்கு விக்ரம் டப்பிங் (Dubbing) கலைஞராக பணிபுரிந்திருக்கிறார்.
நடிகர் விக்ரம் கொகா கோலா (Coca-Cola), ப்ரூக் போண்ட் (Brooke Bond), மணப்புரம் ஃபைனான்ஸ் லிமிடட் (Manappuram Finance Ltd), ஜோஸ்கோ ஜுவலர்ஸ் (Josco Jewellers) போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகளின் விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.
அதுமட்டும் இல்லாமல், சில இசை வீடியோக்களிலும் தோன்றியிருக்கிறார் நடிகர் விக்ரம்.
பொதுப் பணிகள்
நடிகர் விக்ரம் சஞ்சீவனி ட்ரஸ்ட் (Sanjeevani Trust) மற்றும் வித்யா சுதா (Vidya Sudha) போன்ற அமைப்புகளின் பிராண்ட் தூதராக இருந்திருக்கிறார்.
மேலும், இவர் விக்ரம் ஃபவுண்டேஷனை (Vikram Foundation) அமைத்து தனது ரசிகர் மன்றத்தின் மூலமாக, ஏழை மக்களுக்கு இதய அறுவை சிகிச்சைகளை செய்வது, ஏழை குழந்தைகளை படிப்பிப்பது, அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்கு உதவி செய்வது போன்ற பணிகளை செய்கிறார்.
முக்கியமாக தனது பிறந்தநாள்களில் பல தொண்டுகளை செய்து அந்நாளை கொண்டாடுகிறார்.
2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட பாரிய வெள்ளத்தை தொடர்ந்து, நகரத்தின் தன்னார்வலர்களை பாராட்டும் முகமாக 2016 ஆம் ஆண்டில் விக்ரம் அவர்கள் “ஸ்பிரிட் ஆஃப் சென்னை (Spirit of Chenneai)” எனும் வெள்ள நிவாரண கீதத்தை தயாரித்து இயக்கினார்.
இல்லற வாழ்க்கை
நடிகர் விக்ரம் 1992 ஆம் ஆண்டு ஷைலஜா பாலகிருஷ்ணன் எனும் பெண்ணை குருவாயூர் கோவிலில் திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உண்டு.
மகளின் பெயர் அக்ஷிதா ஆகும். அக்ஷிதா 1993 ஆம் ஆண்டு பிறந்தார். விக்ரமின் மகனின் பெயர் துருவ். இவர் 1995 ஆம் ஆண்டு பிறந்துள்ளதோடு தமிழ் சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
நடிகர் விக்ரம் பெற்ற விருதுகள்
| பெற்ற விருதுகள் | எண்ணிக்கை |
| தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் (Tamil Nadu State Film Awards) | 4 |
| தென்னிந்திய ஃபிலிம் பெயார் விருதுகள் (Filmfare Awards South) | 8 |
| தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் (South Indian International Movie Awards) | 3 |
| ஏடிசன் விருது (Edison Award) | 1 |
| விஜய் விருதுகள் (Vijay Awards) | 3 |
| ஏனைய விருதுகள் | 7 |
மேலே குறிப்பிட்டவை தவிர 2003 ஆம் ஆண்டு “பிதாமகன்” திரைப்படத்திற்கு சிறந்த நடிகர் எனும் பிரிவில் தேசிய விருதை பெற்றார்.
இவர் மொத்தமாக 42 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு 26 விருதுகளை பெற்றுள்ளார்.
அதை தவிர, 2011 ஆம் ஆண்டு இத்தாலி நாட்டின் மிலான் எனும் இடத்தில் அமைந்துள்ள யுனிவர்சிடி ஆஃப் த பீப்பல் (University of the People) என்ற பல்கலைக்கழகத்தினால் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
முடிவுரை – Vikram Biography in Tamil
இதுவரை நடிகர் விக்ரம் வாழ்க்கை வரலாறு (Vikram Biography in Tamil) பற்றி பார்த்தோம். முக்கியமாக பிறப்பு மற்றும் குடும்பம், ஆரம்ப வாழ்க்கை, நடிப்பு வாழ்க்கையின் ஆரம்பம், சிறந்த படங்கள், ஏனைய பணிகள், பொதுப் பணிகள், இல்லற வாழ்க்கை, பெற்ற விருதுகள் போன்ற பல விடயங்களைப் பற்றி பார்த்தோம்.
நிச்சயமாக இவரின் வாழ்க்கை வரலாறு பல ரசிகர்களின் முன்னேற்றத்திற்கு உதவியாக இருந்திருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
ஏனென்றால், இவர் தனது வாழ்க்கையில் பல கஷ்டங்களை கடந்து வந்து தற்போது ஒரு முன்னணி ஹீரோவா நடித்துக்கொண்டிருக்கிறார்.
இவரை பற்றி சிந்தித்துப்பார்த்தால், நடிப்பை தன் உயிராக நினைத்து மிக அர்ப்பணிப்புடனும் ஆர்வத்துடனும் நடிக்கக்கூடிய ஒரு மிக சிறந்த நடிகர் ஆவார்.
இவரின் அனைத்து எதிர்கால பணிகளும் வெற்றியடைய வேண்டுமென்று மனதார வாழ்த்துகிறோம்.
நடிகர் விக்ரம் பற்றி மற்றவர்களும் அறிந்துகொள்ள தயவுசெய்து இந்த பதிவை சமூக வலைதளங்களில் பகிரவும்.
மேலும் எமது சமூக வலைதளங்களை (Facebook, X, Instagram, YouTube) Follow செய்யவும் மறந்துவிடாதீர்கள்.


