இன்றைய நவீன காலத்தில் ஸ்மார்ட்போன்களின் வளர்ச்சி பெருகிக்கொண்டே செல்கின்றன. எனினும் அவற்றோடு பிரதிகூலங்களும் அதிகரித்து செல்கின்றன. அவற்றில் குறிப்பாக சொல்லவேண்டிய ஒன்று ஹெக்கிங் (Hacking) ஆகும். தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு வர்த்தகரீதியாகவும் அல்லது கேடு விளைவிக்கும் நோக்கத்திலும் விற்கப்படுகின்றன. அத்தோடு உங்களது தனிப்பட்ட தகவல்களான வங்கி கணக்கு பற்றிய விபரங்கள், குறுஞ்செய்திகள், புகைப்படங்கள், கானொளிகள் (Videos) மேலும் பல தகவல்கள் திருடப்பட்டு தவராகவும் பயன்படுத்தப்படுகின்றன. நீங்கள் அநேகமாக உங்களது தனிப்பட்ட தகவல்களை ஸ்மார்ட்போனில் வைத்திருப்பீர்கள். ஆனால் அவை பாதுகாப்பாக உள்ளனவா என்று நீங்கள் அவதானத்துடன் இருக்கவேண்டும். உங்களது ஸ்மார்ட்போனை ஹெக்கிங்கிலிருந்து பாதுகாத்து கொள்வது எப்படி என்று பார்ப்போம்.
மென்பொருள் புதுப்பித்தல்
ஸ்மார்ட்போன்களின் இயக்க முறைமை (Operating System) அடிக்கடி அந்நிறுவனத்தால் புதுப்பிக்கப்படும். அவற்றின் புதிய பதிப்பை (Version) உங்களது ஸ்மார்ட்போனில் நிறுவ (Install) வேண்டும். புதிய பதிப்புகளில் ஹெக்கிங் செய்வதற்கு இருக்கும் சிறிய சந்தர்ப்பங்களை கூட தடுப்பதற்காக மென்பொருள் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
ஆப்ஸ் (Apps) நிறுவுவதில் கவனமாக இருத்தல்
நீங்கள் புதிதாக ஆப்பை நிறுவும் போது பல்வேறு வகையில் அனுமதிகள் கேட்கப்படும். அதாவது கோப்புகளை வாசித்தல், தொடர்பு விபரங்கள் வாசித்தல், புகைப்படங்கள் வாசித்தல், கானொளிகள் வாசித்தல், கெமராவிற்கு (Camera) நுழைவுரிமை, ஒலிவாங்கி (Microphone) நுழைவுரிமை மற்றும் மேலும் பலவற்றுக்கு அனுமதி கேட்கப்படுவதை அவதானித்திருப்பீர்கள். அவற்றுக்கு அனுமதி கொடுக்கும் போது கவனித்து அனுமதிக்க வேண்டும். நிறுவும் ஆப் ஒரு முறையான ஆப் ஆக இல்லாவிட்டால் நீங்கள் அனுமதிக்கும் போது நிறுவப்பட்ட பின் உங்களது தகவல்களை எளிதாக அந்த ஆப்பை வடிவமைத்தவர்களால் திருட முடியும். ஆகவே அனுமதி கொடுக்கும் பொழுது முற்றிலுமாக வாசித்து அதன்பின் அனுமதிக்க வேண்டும். நீங்கள் ஆப்ஸ் பதிவிரக்கம் (Download) செய்கையில் நம்பகரமான ஆப்ஸ்டோர் (Appstore) அல்லது வலைதளங்களில் பதிவிரக்கம் செய்வது மிக நல்லது. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் எவ்வகையான ஆப்ஸையும் நிறுவ முடியும். ஆகவே நம்பகத்தன்மை இல்லாத வலைத்தளங்களிலிருந்து ஆப்ஸ் நிறுவுவதை தவிர்க்க வேண்டும்.
ஏற்கனவே ஸ்மார்ட்போனில் உள்ளவற்றை நன்கு கவனித்தல்
நீங்கள் பாதுகாப்பானவை என நினைத்து நிறுவும் ஆப்களை அடிக்கடி கவனித்து ஆராய வேண்டும். ஏனெனில் அவற்றின் புதிய பதிப்புகளில் சில கேடு விளைவிக்கும் மென்பொருள்களும் உங்களுக்கு தெரியாமல் தன்னியக்கமாக நிறுவப்பட வாய்ப்பு உள்ளது. அத்தோடு வலைத்தளங்கள் மற்றும் குறுந்தகவல்கள் பரிமாற்றப்படும் ஆப்களில் பலரால் அனுப்பப்படும் பாதுகாப்பில்லாத லிங்க்களை (Links) க்ளிக் (Click) செய்வதால் அவற்றுடன் தொடர்புடைய மென்பொருள்கள் தானாகவே உங்களது ஸ்மார்ட்போனில் நிறுவப்பட்டுவிடும். ஆனால் அது உங்களுக்கு தெரியாமல் இருக்கும். உங்களுக்கு முடிந்த நேரங்களில் உங்களது போனில் நிறுவப்பட்டுள்ள ஆப்களை அவதானியுங்கள். அத்துடன் எவ்வகையான அனுமதிகள் உங்களால் கொடுக்கப்பட்டுள்ளன என்றும் கவனித்து பாருங்கள்.
உறுதியான கடவுச்சொல் (Password) இடல்
ஸ்மார்ட்போனை மற்றவர்கள் பயன்படுத்தும் வகையில் பொதுவான இடங்களில் வைப்பதை தவிர்க்க வேண்டும். மற்றவர்களுக்கு பயன்படுத்தக்கூடிவாறு இருக்கும் போது அவர்களால் உங்களது தனிப்பட்ட தகவல்களை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும். நீங்கள் பயன்படுத்தாத நேரங்களில் உங்களது போன் லொக் (Lock) செய்யப்பட்டுள்ளதா என்று உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். கடவுச்சொல் இடும் போது பெரும்பாலானவர்கள் தனது பிறந்த திகதி, தொலைபேசி இலக்கம், குடும்ப அங்கத்தவர்களின் பெயர் போன்றவற்றை கொடுப்பார்கள். அவ்வாறு கொடுக்கக்கூடாது. ஏனென்றால் அவ்வாறான தகவல்களை மற்றவர்களால் எளிதில் கண்டுபிடிக்க முடியும். ஆகையால் கடவுச்சொல் அளிக்கும் பொழுது சொல்லுடன் சேர்த்து இலக்கங்கள், குறியீடுகள், மற்றும் பெரிய (Upper Case), சிறிய (Lower Case) எழுத்துக்கள் போன்றவற்றால் கலந்து கடவுச்சொல் உருவாக்கப்பட வேண்டும். நவீன் போன்களில் கைரேகை (Fingerprint) மற்றும் முகத்தால் அடையாளம் காணல் (Face Recognition) போன்ற முறைகளில் லொக் செய்யும் வசதி உண்டு. ஆனால் அவை பாதுகாப்பற்ற முறைகளாகும். சாதாரணமாக உங்களது கைரேகை கண்ணாடி மீது பட்டிருந்தால் ஹெக்கர்களால் இலகுவாக உங்களது கைரேகையை பிரதி (Copy) செய்து கொள்ள முடியும். அதேபோல கெமராவை பயன்படுத்தி மோசடி செய்து புகைப்படத்துடன் ஸ்மார்ட்போனை திறக்க முடியும். அவற்றுக்கான நவீன வசதிகள் ஹெக்கிங் செய்வோரிடம் உண்டு. ஆகவே கலந்த எழுத்துக்களுடன் குறியீடுகள் பயன்படுத்தி உருவாக்கும் கடவுச்சொல் தான் மிக பாதுகாப்பானது.
தொலைவிலிருந்து கட்டுப்படுத்த கூடியவாறான முன்னேற்பாடு செய்தல்
உங்களது ஸ்மார்ட்போன் திருடப்பட்டுவிட்டாலோ அல்லது அனுமதி இன்றி யாராவது எடுத்துவிட்டாலோ தொலைவிலிருந்து கட்டுப்படுத்தக்கூடியவாறான தொழிநுட்பங்கள் தற்போது உண்டு. ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஆகிய இரு இயக்க முறைமைகளிலும் இவ்வசதியை பெற்றுக்கொள்ள முடியும். ஆண்ட்ராய்டு போன் எனின் கூகுல் மின்னஞ்சல் முகவரியை கொண்டு “ஃபைண்ட் மை டிவைஸ்” (Find my device) எனும் வசதியை செயல்படுத்த வேண்டும். அதேபோல ஆப்பிள் போனாக இருந்தால் செட்டிங்கில் (Settings) ஐக்ளவுட் (iCloud) எனும் தெரிவில் உள்ள “ஃபைண்ட் மை ஐபோன்” (Find my iPhone) எனும் தெரிவை செயல்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் உங்களது போனை வேறொரு கணனி அல்லது ஸ்மார்ட்போன் வழியாக இலகுவாக கண்டுபிடிக்க முடியும். கண்டுபிடிப்பது மட்டுமன்றி போனை லொக் செய்தல் மற்றும் தகவல்களை அழித்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முடியும்.
ஆன்லைன் (Online) சேவைகளை பயன்படுத்திய பின் லொக் அவுட் (Logout) செய்தல்
நீங்கள் பயன்படுத்தும் ஆன்லைன் சேவைகளான மொபைல் பேங்கிங் (Mobile Banking), மின்னஞ்சல் செய்தல் மற்றும் மேலும் பல வகையான சேவைகளை நீங்கள் பயன்படுத்திய பிறகு சைன் அவுட் (Sign-out) செய்தல் வேண்டும். இல்லையெனில் மற்றவர்களால் உங்களது தனிப்பட்ட ஆன்லைன் கணக்குகளை பயன்படுத்தக்கூடியவாறு இருக்கும். தற்போது நவீன போன்களில் ஆப்களை தனித்தனியாக லொக் செய்யக்கூடிய வசதிகள் உண்டு. அவற்றை பயன்படுத்தி உங்களது தனிப்பட்ட தகவல்களை பாதுகாத்துக்கொள்ள முடியும்.
பொது வைஃபையை (Wi-Fi) பயன்படுத்தாமலிருத்தல்
பொதுவாக நீங்கள் செல்லும் இடங்களான பேருந்து நிலையம், புகையிரத நிலையம், உணவகங்கள் மற்றும் மேலும் பல பொது இடங்களில் இலவச வைஃபையை பயன்படுத்தும் வாய்ப்புகள் கிடைக்கும். அவற்றை முற்றிலும் பயன்படுத்தாமல் இருப்பது மிக நல்லது. ஏனென்றால் நீங்கள் உங்களது போனில் நுழைவுரிமை கொடுக்கும் போது அது ஹெக்கர்கள் உங்களது போனை அவதானிக்க கொடுக்கும் நுழைவுரிமையாக கூட இருக்கலாம். அவர்களால் இலகுவாக நீங்கள் எவ்வாறான பணிகளை ஆன்லைனில் செய்கிறீர்கள் என தெரிந்துகொள்ள முடியும். அவ்வாறு கண்டிப்பாக பொது வைஃபையை பயன்படுத்த வேண்டிய ஒரு சூழ்நிலை வந்தால் விபிஎன் (VPN) ஆப் ஐ நிறுவி பயன்படுத்த முடியும். அப்போது ஓரளவு பாதுகாப்பாக இருக்கும்.
லொக்ஸ்க்ரீன் (Lock screen) அறிவிப்புகளை (Notifications) தடுத்தல்
புதிய போன்களில் லொக்ஸ்க்ரீனில் அறிவிப்புகள் காட்டும் வசதி உண்டு. பெரும்பாலும் நீங்கள் அவ்வசதியை செயற்படுத்தியிருப்பீர்கள். ஆனால் அது ஆபத்தான ஒரு விடயமாகும். உங்களது போன் லொக் செய்யப்பட்டிருந்தாலும் லொக்ஸ்க்ரீனில் உங்களுக்கு வரும் குறுந்தகவல்கள், மின்னஞ்சல் மேலும் பல அறிவிப்புகளை காட்டும் போது மற்றவர்களால் எளிதில் தெரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும். எனவே அச்சேவையை செயற்படுத்தாமலிருப்பது நல்லது.
தனித்தனியாக ஆப்களை லொக் செய்தல்
ஆண்ட்ராய்டின் புதிய பதிப்புகளில் தனித்தனியாக ஆப்களை லொக் செய்யக்கூடிய வசதி உண்டு. எனினும் எல்லா வகையான போன்களிலும் இவ்வசதி இருக்காது. ஆனால் இலவசமாக பதிவிரக்கம் செய்து நிறுவிக்கொள்ள முடியும். உதாரணமாக ஃபோல்டர் லொக் (Folder Lock), ஆப் லொக் (App Lock) போன்ற ஆப்களை குறிப்பிடலாம். இவற்றின் மூலம் உங்களது போனில் உள்ள அனைத்து வசதிகளையும் தனித்தனியாக லொக் செய்துகொள்ள முடியும்.
போனை விற்கும் போது ரீசெட் (Reset) செய்து விற்றல்
நீங்கள் பயன்படுத்துகிற போனை விற்க நினைத்தால் அவசரமாக கொடுத்துவிட வேண்டாம். ஏனென்றால் உங்களுடைய தனிப்பட்ட விபரங்கள் வெவ்வேறு ஃபோல்டர்களில் (Folders) வெவ்வேறு கோப்புக்களாக (Files) சேவ் (Save) செய்யப்பட்டிருக்கும். நீங்கள் உங்களது தகவல்களை அழித்துவிட்டீர்கள் என நினைப்பீர்கள். ஆனால் அவை உங்களுடைய போனில் களஞ்சியம் செய்யப்பட்டிருக்கும். விற்க முதல் போனை முற்றிலுமாக ரீசெட் செய்யவேண்டும். அதன்போது ஒரு தெரிவு காணப்படும் மேலோட்டமாக அழிப்பதா அல்லது முற்றிலுமாக அழிப்பதா என்று. அனைத்து கோப்புகளும் அழியும் வகையில் முற்றிலுமாக ரீசெட் செய்யவேண்டும்.
உண்மையிலேயே ஸ்மார்ட்போன்கள் நமது வேலைகளை மிகவும் இலகுவாக்குகின்றன. இருந்தபொழுதிலும் பல ஆபத்துகளும் நம்மை சுற்றி உள்ளன. போனை பயன்படுத்துகையில் தனிப்பட்ட தகவல்களை பாதுகாத்துகொள்ளக்கூடியவாறு பயன்படுத்தினால் எந்த பிரச்சினையும் ஏற்படாது. தொழில்நுட்பங்கள் புதிது புதிதாக அறிமுகமாகும் பொழுது கேடு விளைவிக்கும் செயல்களும் அதிகரிக்கின்றன. ஆகவே ஸ்மார்ட்போனில் உள்ள பாதுகாப்பு வசதிகளை அறிந்து பயன்படுத்துவது சிறந்தது.